அரசு பேருந்து மோதி கால்களை இழந்த தொழிலாளி – இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி
கோவையில் அரசுப் பேருந்து மோதிக் கால்களை இழந்த தூய்மை பணியாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
கோவை புலியகுளம் ஏரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (46). தூய்மை பணியாளர். இவர் கடந்த 2022 நவம்பர் 22ஆம் தேதி அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து விஜயகுமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வலது காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது கால் செயலிழந்ததாக மருத்துவர்கள் கூறியதால், முழங்கால் வரை அவரது கால் அகற்றப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்ட விஜயகுமார்., கோவை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஜே.எம்சி.ஓ.பி நீதிமன்றம் விஜயகுமாருக்கு ரூ.23.90 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்ற உத்தரவிட்டும் தொடர்ந்து இழப்பீடு வழங்காததால், மீண்டும் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு எதிராக அவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வட்டியுடன் சேர்த்து ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி, காந்திபுரம் – வெள்ளிங்கிரி செல்லும் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ஜப்தி செய்யப்பட்ட பேருந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.