ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இழுத்தடிக்க வேண்டியதில்லை – சீமான்
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு செல்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமானம்மூலம் கோவை வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது: திருப்பரங்குன்றம் விவகாரம் தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்ற வேண்டும் என்று பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது தொடர்பான கேள்விக்கு, நாட்டில் பல கோடி மக்கள் பசியாக இருக்கிறார்கள் முதலில் அவர்களது வீடுகளில் விளக்கேற்றுங்கள் பிறகு வீடு வீடாக விளக்கேற்றலாம் என்றார். மேலும் வீடுகள் எல்லாம் இருட்டிலா உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழைக் கொடுத்து விடலாம், அதன் தெலுங்கு பதிப்பை நான் பார்த்தேன் நெருக்கடி தரும் அளவிற்கு ஒன்றும் இல்லை எனவே தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ் என்பது சீமானுக்கு அரசியல் பிழைப்பு என்று சுப வீரபாண்டியன் தெரிவித்திருந்தது குறித்தான கேள்விக்கு: உயிரோடு இருப்பவர்களின் கருத்துக்களுக்கு மட்டும் பதில் அளிக்கலாம், அவர் போய்ப் பல நாள் ஆகிவிட்டது எனப் பதிலளித்துச் சென்றார்.