அரசு அலுவலகங்களில் பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களை வைக்கக்கோரிக்கை!
அரசு அலுவலகங்களில் பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களை வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு படங்களை மாட்ட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தந்தை பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களைப் பொருத்த கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டும் முறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அந்த அமைப்பினர் இன்று பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
மேலும் உடனடியாகத் தமிழ்நாடு அரசின் அரசாணை படி உடனடியாகப் படங்களை மாட்ட வேண்டும் என வலியுறுத்திக் கோசங்களை எழுப்பினர்.
இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வே ஈஸ்வரன் கூறும்போது: ஏற்கனவே தமிழ்நாடு அரசு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கார் படங்களைப் பொருத்த அரசாணை போட்டுள்ளது.
இந்த அரசாணையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த இரண்டு முறை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. புதிதாக ஒரு செயலை அமல்படுத்த கூறவில்லை.
அரசின் அரசாணையை நிறைவேற்ற வேண்டும் எனவே வலியுறுத்துகிறோம். இல்லையெனில் படங்களை நாங்களே மாட்டிக் கொள்கிறோம் என்றார்.