திமுக தான் ஐசியுவில் இருக்கிறது; அதிமுக இல்லை – எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக ஒன்றாக இருக்கிறது என்பதை தேர்தல் வெற்றி நிரூபிக்கும் – ஆனைமலையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
கோவை வால்பாறை தொகுதி ஆனைமலை பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறும்போது :
“திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்துவிட்டது. இந்த ஆட்சியில் வால்பாறை தொகுதிக்குப் புதிய திட்டம் ஏதாவது கொண்டு வந்தார்களா? தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வெளியிட்டு, ஆட்சி வந்ததும் மக்களை மறந்துவிட்டார்கள்.
அதிமுக ஒரே ஆட்சியில் தான் இரண்டு முறை விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் திருமண உதவி தொகையோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.
லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு அறிவுபூர்வமான கல்வி கிடைக்க அதிமுக அரசு செயல்படுத்தியது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது.
ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். மலையில் இருந்தாலும் சரி இப்பகுதியில் இருந்தாலும் சரி கட்டிக்கொடுப்போம். மக்கள் பாராட்டும் அளவுக்கு வீடுகள் இருக்கும்.
அதிமுக ஐசியுவில் இருக்கிறது என்கிறார் உதயநிதி. அப்படியா இருக்கிறது..? நீங்கள் நேரலையில் பாருங்கள், மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வருமென்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
திமுகதான் ஐசியுவில் இருக்கிறது.
எல்லா கட்சிகளிலும், விரும்பியவர்கள் கட்சியில் சேருவார்கள். திமுக செல்வாக்கை இழந்துவிட்டதால் வீடுவீடாகச் சென்று கெஞ்சி, கையெழுத்துப்போடுங்க என்று கேட்கும் அவலநிலை திமுகவுக்கு வந்திருக்கிறது.
திமுகவுக்கு மருத்துவமனையில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் இருக்கும்வரைதான் உயிர் இருக்கும். அதை எடுத்துவிட்டால் உயிர் போய்விடும். அதுபோல இன்னும் 7 மாதம் தான் இருக்கிறது.
அதுவரையே அதிகாரம், அதிகாரத் திமிரில் பேசுவதை விட்டுவிட்டு, மக்களுக்குத் தேவையான நன்மைகளைச் செய்யுங்கள் எனத் தெரிவித்தார்.