த.வெ.க தலைவர் விஜய்யை நடிகராகத் தான் அனைவரும் பார்க்கின்றனர் – செல்லக்குமார்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, திருநெல்வேலி மாநாடு செப்டம்பர் 7 ஆம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலுவின் தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்களும் ஆயிரக் கணக்கான தொண்டர்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் எனக் கூறினார்.
இந்திய முழுவதும் தேர்தல் கமிஷன், பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து வாக்காளர்களைத் திசை திருப்பும் சூழ்நிலை ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரே முகவரியில் ஆயிரக் கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும், தேர்தல் ஆணையம் ஒத்துழைக்கவில்லை என்று அவர் கண்டித்தார்.
மத்திய அரசின் கொள்கைகள், மோடி அரசின் வெளிநாட்டு கொள்கைகள் தோல்வி அடைந்து உள்ளன என்றும், இதன் விளைவாகக் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பின்னலாடை தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக மோதலால், ஏற்றுமதிக்கான ஆடைகளுக்கு 50% வரி விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் மோடியின் நண்பர்களாக உள்ள குஜராத்தில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் பலன் கிடைக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியை விழுங்கி விட்டது என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்துகுறித்து கேட்கப்பட்டபோது, முதலில் அவர் தனது கட்சியைப் பா.ஜ.க விலிருந்து காப்பாற்ற வேண்டும் எனச் செல்லக்குமார் பதில் அளித்தார். ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க, பிராந்தியக் கட்சிகளின் தோளில் ஏறியே வளர்ச்சி அடைந்தது என்று அவர் சாடினார்.
கூட்டணி – சீட் பேச்சுவார்த்தைகுறித்த கேள்விக்கு, கூட்டணிகுறித்த முடிவுகளை டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டுமே எடுக்கும். அதிக தொகுதிகள் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை, அது கட்சியின் வளர்ச்சிக்கான ஒரு இயல்பான செயல் என்றார்.
தமிழக வெற்றிக் கழகம்பற்றிய கேள்விக்கு, புதிய கட்சி வந்தால் மக்கள் ஆர்வத்துடன் செல்வது இயல்பு. ஆனால் அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கருத முடியாது. விஜய்யை தற்போது வரை நடிகராகவே பார்க்கிறோம் என்றார்.
வரவிருக்கும் திருநெல்வேலி மாநாடு, ஓட்டு திருட்டு உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து நடைபெறும் முக்கிய கூட்டமாக இருக்கும் என்றும், கூட்டணி மற்றும் சீட் ஒதுக்கீடுகுறித்த முடிவுகளைக் கமிட்டி மட்டுமே எடுக்கும் என்றும் செல்லக்குமார் தெரிவித்தார்.