கனமழை எதிரொலி கோவை குற்றாலம் அருவி மூடல்.
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து குற்றாலம் அருவி ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த ஏழு நாட்களுக்குத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவிலிருந்து கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவியில் குளிக்கப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான மக்கள் குற்றாலம் அருவியில் குளிக்க வர வாய்ப்புள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடப்படுவதாகவும், மீண்டும் சீரான நீர் வரத்து வந்தபின்னர் கோவை குற்றாலம் அருவி திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.