கோவை பேரூரில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைப்பு!
கோவை பேரூர் அய்யாசாமி கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட நிலையில், மதுக்கரை வனத்துறையினர் சிறுத்தை பிடிக்கக் கூண்டு வைத்துக் கண்காணித்து வருகின்றனர்.
கோவை பேரூர் தீத்திபாளையம் அடுத்த அய்யாசாமி கோயில் அருகே பகல் நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாகச் செல்போன் வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மதுக்கரை வனத்துறையிடம் தெரிவித்தனர்.
பின்னர் வனத்துறையினர் அங்கு ஆய்வு செய்தபோது சிறுத்தையின் கால் தடம் இருந்தது உறுதியானது. இந்நிலையில் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் சிறுத்தை தென்பட்டுள்ளதால், அதனைக் கூண்டு வைத்துப் பிடித்து அடர் வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் எனப் பேரூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மதுக்கரை வனத்துறை சார்பில் அய்யாசாமி கோயில் அருகே சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராவையும் வனத்துறையினர் பொருத்தி உள்ளனர்.