கோவையில் போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு பேரணி!
கோவை போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போதையில்லா தமிழ்நாடு- 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர். இதனை மாவட்ட ஆட்சி தலைவர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி போதை பொருள் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வை மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கல்லூரி வளாகங்களில் தடை செய்யப்பட்ட போதை மற்றும் குட்கா பொருட்கள் இருக்க கூடாது எனத் தெரிவித்தார். மேலும் போதைப் பொருட்கள் குறித்தான தகவல்கள் ஏதேனும் வந்தால் உடனடியாகச் சம்பந்தப்பட்ட துறையின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எல்லாம் மாணவர்கள் ஆகிய நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.