அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் இருதய சிகிச்சை செய்ய முடியவில்லை – ஆட்சியரிடம் புகார் மனு
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவரது கணவர் கார்த்திகேயன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தனது கணவருக்குக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பதாகக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சரண்யா தெரிவிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது கணவருக்கு இருதய பிரச்சனை இருந்து வருகிறது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய பிரச்சனை தொடர்பாக மருத்துவரிடன் காண்பித்தும், என்ன பிரச்சனை என உறுதிப்படுத்தாமலே மாத்திரிகளைக் கொடுத்து வந்தனர்.
மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் சாப்பிட்டு வந்தோம். ஆனால் நோய் சரியாகாமல் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டோம்.
தனியார் மருத்துவமனையில் பார்த்த போது இருதய வால்வில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து இது குறித்த அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தெரிவித்த போது இங்கு இருதயத்திற்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
எங்களிடம் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறப் பண வசதி இல்லாததால் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.