கோயம்புத்தூரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி.
கோவை பேரூர் தீத்திபாளையம் அருகே, வீட்டின் மேற்கூரையில் இருந்த இரும்பு தகரத்தில் மின்சாரம் பாய்ந்து, இரண்டு பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (31). கூலித் தொழிலாளி. பேரூர் தீத்திபாளையம் பகுதியில் சொந்த வீடு உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல விக்னேஸ்வரன் வேலைக்காக தீத்திபாளையம் வந்தார்.
அப்போது தொடர்ந்து மழை பெய்ததால் தீத்திபாளையம் வீட்டின் அருகே நின்று செல்பேனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் வழியக் கட்டப்பட்டிருந்த இரும்பு தகரம், வீட்டிற்குச் செல்லும் மின் கம்பியில் உரசியவாறு இருந்துள்ளது. இதை அறியாத விகனேஷ்வரன் இரும்பு தகரத்தைத் தொட்டுள்ளார்.
இதில் தூக்கி வீசப்பட்டு மயங்கினார். இதையடுத்து அருகே இருந்த உறவினர்களான நாகராஜ் உள்ளிட்ட சிலர் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் நாகராஜ் (40) சக உறவினர்களுடன் விக்னேஷ்வரன் இறந்த அதே பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது அவரும் தெரியாமல் தகரத்தைத் தொட்டுள்ளார், இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜூம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாகப் பேரூர் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.