27ஆண்டு கனவு – டெஸ்ட் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது தென்னாப்பிரிக்கா..!
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பை தென்னாப்பிரிக்கா அணி வென்றுள்ளது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாகத் தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தென்னாப்பிரிக்காவிற்கு பலம் சேர்த்தார். 67 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தாலும் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரும் அரைசதமடித்து அணியை 212 ரன்களுக்கு எடுத்துச்சென்றனர்.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸின் அற்புதமான பந்துவீச்சால் 138 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பெடிங்காம் 45 ரன்கள் அடித்தார், கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு 300 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.
74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. இதில் மீண்டும் தென்னாப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி இருவரும் அடுத்தடுத்து ஆஸ்திரேலியா வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினர்.
73 ரன்னுக்கே 7 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தாலும், கடைசியாக வந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் ஆஸ்திரேலியாவை 207 ரன்கள் என்ற நல்ல எண்ணிக்கைக்கு அழைத்துச்சென்றனர்.
தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், யாருக்கு வெற்றி என்ற 4வது இன்னிங்ஸில் அதிகப்படியான அழுத்தத்துடன் தொடங்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரர் ரிக்கல்டனை விரைவாகவே வெளியேற்றிய மிட்செல் ஸ்டார்க் அசத்தினார்.
முதல் விக்கெட்டை இழந்தாலும் பொறுப்பாக விளையாடிய மார்க்ரம் மற்றும் முல்டர் இருவரும் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர். முல்டரை 27 ரன்னில் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார், அதற்குபிறகு களத்திற்கு வந்த கேப்டன் டெம்பா பவுமா கேட்ச்சை ஸ்லிப் திசையில் ஸ்டீவ் ஸ்மித் கோட்டைவிட்டார்.
அதற்குபிறகு விக்கெட்டுக்கான வாய்ப்பையே வழங்காமல் அற்புதமாக பேட்டிங் செய்த டெம்பா பவுமா மற்றும் மார்க்ரம் இருவரும் 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு தென்னாப்பிரிக்காவின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிசெய்தனர். பவுமா 66 ரன்னில் வெளியேறினாலும், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 136 ரன்கள் அடித்த மார்க்ரம் கெத்தாக தென்னாப்பிரிக்காவை கோப்பைக்கு அழைத்துச்சென்றார்.
அந்த அணி5 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. 1998-ம் ஆண்டு நடந்த ஐசிசி நாக் அவுட் போட்டியில் பெற்ற வெற்றிக்கும் பிறகு 27 வருடம் கழித்து ஐசிசி கோப்பையை வென்று மகுடம் சூடியது தென்னாப்பிரிக்கா அணி.