அகமதாபாத் விமான விபத்து – ”இருதயத்தை உடைத்துள்ளது” – பிரதமர் மோடி உருக்கம்..!
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்களில் 241 பேர் உயிரிழந்தனர். இது சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய கோர விபத்தாகும்.
விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் :
“அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைத்துள்ளது. இந்த சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில் :
“அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளேன். விபத்து நடந்த இடத்திற்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் ஆகியோருடன் பேசினேன்” என தெரிவித்தார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வெளியிட்ட எக்ஸ் பதிவில் :
“அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்து குறித்து நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். விபத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்யவும் அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஒரு பசுமை வழித்தடத்தை ஏற்பாடு செய்யவும், மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்யவும் நான் அறிவுறுத்தியுள்ளேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னிடம் பேசினார். இந்த விமான விபத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் மற்றும் மத்திய அரசின் முழு ஆதரவையும் உறுதி செய்தார்” என குறிப்பிட்டிருந்தார்.
சம்பவ இடத்தில் அமைச்சர் ஆய்வு:
அகமதாபாத் விரைந்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துயரமான மற்றும் கொடூரமான இந்த சம்பவத்தால் நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்துள்ளேன். நான் இன்னமும் அதிர்ச்சியில் இருக்கிறேன். பிரதமர் என்னை அழைத்து சம்பவ இடத்தில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த நேரத்தில், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைப் பற்றி மட்டுமே என்னால் நினைக்க முடிகிறது.
பல நிறுவனங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. எவ்வளவு பேர் இறந்தார்கள் என்பது குறித்து நான் இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். மத்திய உள்துறை அமைச்சரும் இங்கு சம்பவ இடத்திற்கு வருகிறார். (பாஜக தலைவர்) விஜய் ரூபானியும் விமானத்தில் இருந்தார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. மற்ற நாட்டவர்களும் அதில் இருந்தனர். நாங்கள் நியாயமான மற்றும் முழுமையான விசாரணையை மேற்கொள்ளப் போகிறோம். இந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதன் அடி ஆழம் வரை செல்வோம்” என தெரிவித்தார்.
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான நிலைய செயல்பாடு:
இந்த விபத்தை அடுத்து, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் (எஸ்.வி.பி.ஐ.ஏ) செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சரிபார்ப்புகளை அடுத்து விமான நிலையம் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது.
இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 171, இன்று ஒரு துயர விபத்தில் சிக்கியதை ஆழ்ந்த துக்கத்துடன் உறுதிப்படுத்துகிறேன். இந்தப் பேரழிவு தரும் நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் உள்ளன.
இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆதரிப்பதே எங்கள் முதன்மை கவனம். சம்பவ இடத்தில் அவசரகால மீட்புக் குழுக்களுக்கு உதவவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் பராமரிப்பையும் வழங்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கும்போது மேலும் புதுப்பிப்புகள் பகிரப்படும். அவசர மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தகவல் தேடும் குடும்பங்களுக்கு ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
போயிங் நிறுவனம் விளக்கம்: இந்த விபத்து குறித்து போயிங் வெளியிட்ட அறிக்கையில், “ஆரம்பகட்ட அறிக்கைகள் கிடைத்துள்ளன. மேலும், தகவல்களை சேகரிக்க தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, பங்குச் சந்தையில் போயிங் நிறுவன பங்குகள் வெகுவாக சரிந்துள்ளன.
டாடா குழுமம் நிவாரண நிதி அறிவிப்பு: “ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது மிகுந்த வேதனை அளிக்கிறது. எங்கள் துயரத்தை வெளிப்படுத்த எங்களிடம் வார்த்தைகள் இல்லை. தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள், காயமடைந்தவர்கள் சார்ந்தே எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். அவர்களுக்கான சிகிச்சையை உறுதி செய்வோம். விபத்தில் சேதமடைந்த பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தை புனரமைப்பதில் எங்களது பங்கு இருக்கும்” என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது.