Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

அவினாசி மேம்பால பணிகள் ஜூலை இறுதிக்குள் நிறைவடையும் – அமைச்சர் எ.வ. வேலு

கோயம்புத்தூர் அவினாசி மேம்பாலம் பணிகள் ஜூலை 30 ஆம் தேதிக்குள் நிறைவடைந்து, அதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைப்பார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் அவினாசி மேம்பாலம் மற்றும் காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெரியார் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டுமான பணிகளை நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறும் போது: கோயம்புத்தூர் மிகப்பெரிய அளவில் பெரியார் பெயரில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைக்கக் கடந்த நவ.6 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து விரைந்து பணிகளை முடித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான் மூன்று முறை நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். கோயம்புத்தூரில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைய உள்ள இந்த நூலகம் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், 7 தளங்களுடன் அமைகிறது.

கட்டுமான பணிகளுக்கு ரூ.245 கோடி, 90 ஆயிரம் புத்தகங்களுக்கு ரூ.50 கோடி, இதர கணினிகளுக்கு ரூ.5 கோடி என ரூ.300 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு தனித்தனியாக அறைகள் அமைகிறது. அதே போல தொழில்சார் பயிற்சி மையம், 360 இருக்கைகளுடன் உள்ளரங்கம், 4 நகரும் படிக்கட்டுகள், தனி புத்தக வாசிப்பு அறைகள் எனப் பிரமாண்டமாக அமைய உள்ளது.

இப்பணிகளை வரும் டிச.30க்கும் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது, அதன் பின்னர் ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நூலகத்தைத் திறந்து வைப்பார்.

அதே போலக் கோவை அவினாசி சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ரயில்வே கிராசிங் ஏரியாவில் பணிகளை மேற்கொள்ள ரயில்வே துறையிடம் அனுமதி கிடைத்து விட்டது, விரைவில் அப்பணிகள் நடைபெறும். வரும் ஜூலை.30க்குள் பணிகள் நிறைவடைந்து முதலமைச்சர் இப்பாலத்தைத் திறந்து வைப்பார்.

கடந்த 4 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட பணிகள் குறித்து முதல்வர் கேட்டறியும் ஆய்வுக் கூட்டத்தில் முதலாகக் கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் பெரியார் நூலகம் குறித்துத் தான் கேட்டறிந்தார். பின்னர் அவினாசி மேம்பால பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஒன்றிய அரசின் சாலை மற்றும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை நேரில் அழைத்துப் பேசி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து பணிகளை முடிக்க அறிவுறுத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!