கோயம்புத்தூர்: தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!
கோயம்புத்தூரில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறை கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாகத் திங்கள்கிழமை முதல் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை ரூ.770 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பணி நிரந்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறை கைது செய்தனர்.