கோயம்புத்தூர்செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – மாவட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கினார்.

கோடை விடுமுறைகள் முடிந்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார்ப் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாளான இன்றே தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2025 – 26 -ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் பள்ளி குழந்தைகளுக்குப் புத்தகங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதில் கோவை துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான பாடபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள், பை, கல்வி உபகரணங்களை வழங்கினர்.

முன்னதாக பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்குச் சென்று ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் மாணவிகளுடன் கலந்துரையாடினர்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார்: கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 1,387 அரசுப் பள்ளிகளில் உள்ள சுமார் 2 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாடப் புத்தகங்கள், பை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

மேலும் முதல் நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகளைத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஜூன் இறுதி வரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தனியார்ப் பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களைச் சேர்க்க வில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குறிப்பாகப் பிரச்சனை உள்ள பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!