கோயம்புத்தூர்: மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கா.கிரியப்பனவர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் பகுதியில் மழையால் வீடுகள் இடிந்து விழுந்து, பாதிக்கப்பட்ட இடத்தை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கான உதவித் தொகைகளை வழங்கினார்.
இதையடுத்து கோயம்புத்தூர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள அணைக்கட்டு மற்றும் செல்வபுரம் செல்வ சிந்தாமணி குளத்தின் நீர்வழிப் பாதை ஆகியவற்றை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகக் கோவையில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.