கோயம்புத்தூர்: கனமழை எச்சரிக்கை தொடர்ந்து தயார் நிலையில் மின்சாரத் துறை!
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துணை மின் நிலையங்களிலும் மின் வாரிய சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு வரும் மூன்று நாட்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மின்சாரத் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் மழை பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3,400 மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் 15 பேர் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.மின்வெட்டு, மரம் விழுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாட்ஸ் அப் மூலம் இணைப்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24/7 நேரமும் அனைத்து மின் ஊழியர்களும் பணியில் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கன மழை பெய்தாலும் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுமோ எனப் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது