கோயம்புத்தூரில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
கோயம்புத்தூர் மாவட்டத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 40 நிவாரண முகாம்கள், 100 ஜே.சி.பி, 43 ஜெனரேட்டர்கள், எனப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மின் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு, வருவாய்த் துறை, என அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் மழை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கா.கிரியப்பனவர் கூறும் போது :
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் உத்தரவின் பேரில் 2 நாட்களாக மாநகராட்சி , நகராட்சி , நெடுஞ்சாலைத் துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மழை சமயத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டிய உபகரணங்கள் வைத்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை மற்றும் டாப்சிலில் மழை அதிகம் இருக்கும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புக் குழு அங்கு அனுப்பப்பட்டுள்ளது. அதே போல 80 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பொள்ளாச்சி அனுப்பப்பட்டுள்ளது. ஆறுகள், நீர் நிலைகள் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்கவேண்டும்.
மாநகராட்சியில் மண்டல வாரியாகவும் , நகராட்சி சார்பிலும் உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.மேம்பாலம் கீழ் சுரங்கப்பாதை பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் மரம் விழுதல், மண் சரிவு போன்ற காரணங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களைத் தங்க வைக்க அரசு கல்லூரியில் தற்காலிக நிவாரண மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. வால்பாறை சாலையில் 3 இடங்களில் இயந்திரங்களுடன் குழுக்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை குறித்து தவறான தகவல்களைப் பரப்பினால் அவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
40க்கும் மேற்பட்ட நிவாரண மையங்கள், 43 ஜெனரேட்டர்கள், 100 ஜேசிபி-கள் ,50 தண்ணீர்லாரிகள், 3,400 மின்கம்பம் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்