ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!
பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாகக் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த இளைஞரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா விதைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறை நேற்று சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூர் வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளில் சோதனை நடத்தினர்.
அப்பொழுது பாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாகக் கோவை வந்த பயணி ஒருவர் கொண்டு வந்த உடைமைகளைச் சோதனையிட்ட போது, அதில் 5.25 கிலோ கஞ்சா விதைகள் பதுக்கிக் கடத்தி எடுத்து வரப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இளைஞரிடம் விசாரித்த போது பிடிபட்ட இளைஞர் கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த முகமது பாசில் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விதைகளைக் கடத்தி வந்த இளைஞரைக் கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா விதைகளின் மதிப்பு ரூ. 5 கோடி எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.