அரசியல்தமிழ்நாடு

தங்கநகை பூங்கா சிறந்ததாக அமையும் – அமைச்சர் தா.மோ. அன்பரசன்

கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக கூட்டரங்கில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் குறிச்சி சிட்கோ தொழில் பேட்டையில் தங்க நகை பூங்கா அமைப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குனர் / அரசு முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பவனர், தொழில்துறை ஆணையர் எல்.நிர்மல்ராஜ், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன பொது மேலாளர் எஸ்.தனலிங்கம் மற்றும் தங்க நகை தயாரிப்பாளர் சங்கப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் சிட்டார்க் நிறுவனம் சார்பில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் மின் வாகன மோட்டார் சோதனைக்கான, புது வசதி மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தா.மோ.அன்பரசன் கூறியதாவது :

கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பரில் அறிவித்தாா்.

இதையடுத்து, தங்க நகை பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொண்டு, தற்போது முழு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிட்கோ தொழிற்பேட்டையில் 2.46 ஏக்கா் பரப்பளவில் 8 லட்சத்து 57 ஆயிரம் சதுர அடியில் கட்டடம் அமைக்கப்பட உள்ளது.

இதில், தங்க நகை பட்டறைகள், தங்க நகை உற்பத்திக்கான பொது வசதி மையம், 3 பிரிண்டிங் மற்றும் லேசா் கட்டிங் வசதிகள், ஹால்மாா்க் தரப் பரிசோதனைக் கூடம், பாதுக்காப்புப் பெட்டகம், கண்காட்சிக் கூடம், கூட்ட அரங்கம், பயிற்சி மையம், அதிநவீன கண்காணிப்பு வசதிகள், வாகன நிறுத்துமிடம் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகச்சிறந்த தங்க நகை பூங்காவாக இந்தப் பூங்கா அமையவுள்ளது.

அரசு மிகுந்த கவனத்துடன் திட்டத்தை தயாரித்திருந்தாலும், நகை உற்பத்தியாளருக்கு தேவையான வசதிகள், மாற்றங்கள் இருந்தால் கூறலாம் என்று கலந்தாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!