பொள்ளாச்சி பாலியல் வழக்கை அதிமுக, திமுக என யாரும் உரிமை கோர முடியாது – தொல்.திருமாவளவன்
கோயம்புத்தூரில் நடைபெறும் கடசி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டிற்குக் களங்கத்தை ஏற்படுத்திய செயல், இது போன்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மூலையில் நடக்கக்கூடாது, என்ற அளவிற்கு இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற ஐயம் இருந்தது ஆனால் அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்கறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள் என்பது இதில் உறுதிப்படுகிறது. அந்த வகையில் அரசு தரப்பு வழக்கறிஞர்களையும் பாராட்டுகிறேன்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஏற்பட்ட ஒரு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்திருக்கிறது. அந்த வகையில் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன் பாராட்டுகிறேன்.
இந்த வழக்கில் திமுக அதிமுக விசிக என உரிமை கோருவதில் நியாயம் இல்லை சான்றுகள் வலுவாக இருந்தது. குறிப்பாக கைப்பேசிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த தடையங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தது. அதுவே அவர்களால் தப்பிக்க இயலவில்லை.
அதிலிருந்து அவர்களால் மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள் என்பதே உண்மை, அந்த ஆதாரங்கள் தான் இந்த தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையங்களாக இருந்திருக்கிறது, இதில் யாரும் உரிமை கோருவதில் அர்த்தமில்லை என்றார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்ல யார் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு அந்த வழக்கு என தனித்தனியாக அணுக முடியாது, பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்து மாநில அரசு தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வருகிறதோ அதே வேளையில் சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற ஆபாச வலைத்தள விளம்பரங்கள் போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும்.
இந்த வலைத்தளங்களை முற்றிலும் பயன்படுத்தாத அளவிற்குக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், ஒன்றிய அரசுக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது மாநில அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆகவே பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு இவையும் முக்கியமான காரணமாக உள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் ஆர் எஸ் எஸ் சாக்கா பயிற்சி அளிப்பது தொடர்பான கேள்விக்கு, பள்ளி கல்லூரிகளில் ஆர் எஸ் எஸ் சாக்கா பயிற்சியைப் பாசறை மையங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். நான் சென்னையில் கல்லூரி மாணவனாகத் தங்கி இருந்தபோது என்னுடைய அறைக்கு வந்து ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் மாணவர்களை அழைக்க வந்திருந்த நிலையில் என்னையும் பயிற்சிக்கு வாருங்கள் என அழைத்திருக்கிறார்கள், எனக்கே அந்த அனுபவம் உள்ளது.
சாக்கா பயிற்சி பள்ளி வளாகங்களில் அதிகாலை நேரங்களில் நடத்துகின்றனர் இன்னும் தொடர்கிறது. அவர்கள் மதவாத கருத்துக்களை இதன் மூலம் பரப்புகிறார்கள் யோகா பயிற்சி பெறுவதாகக் கூறி மேலோட்டமாக சொல்லப்பட்டாலும் மதவாத அரசியலைப் பிஞ்சு உள்ளத்தில் திணிக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பரவக்கூடிய மதவாத அரசியலைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்