கோயம்புத்தூர்செய்திகள்

வெள்ளிங்கிரி மலை ஏறிய பள்ளிச் சிறுவன் உயிரிழப்பு!


கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி மலை ஏறிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளிச் சிறுவன் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கம்பர் பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஸ்வா (15). இவர் சிலுவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சிறுவன் விஸ்வா தனது தந்தை முருகன் மற்றும் உறவினர்களான சுந்தரபாண்டி, கவி உள்ளிட்ட நபர்களுடன் திங்கள்கிழமை காலை திண்டுக்கலில் இருந்து புறப்பட்டு, மாலை கோவை பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

தொடர்ந்து சிறுவன் உட்பட அனைவரும் மலையேறி ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர். பின்னர் அதிகாலை 5 மணியளவில் அனைவரும் கீழே இறங்கியுள்ளனர்.

மூன்றாவது மலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சிறுவன் விஸ்வா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் சேர்ந்து சிறுவனை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு மருத்துவ முகாமில் இருந்த மருத்துவர் சிறுவன் விஸ்வாவை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை போலீசார் விஷ்வாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!