கல்விக்கு வயது தேவையில்லை: 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற 70 வயது மூதாட்டி..!
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (70). இவர் தேனியில் உள்ள பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 -ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
பின்னர் தங்கராஜ் என்பவரைத் திருமணம் செய்து, கோயம்புத்தூர் வந்துள்ளார். அதன் பின்னர் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு குடும்பத்துடன் சென்றார்.
கடந்த 2008 -ல் இருந்து கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கணவர் தங்கராஜ் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
இதனால் ராணி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் தனியாக வசித்து வந்த ராணிக்குக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இதற்காகக் கடந்த ஆண்டு 11ம் வகுப்புத் தேர்வு எழுதிய அவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். இதில் 346 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து ராணி கூறியதாவது: தனக்கு நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் அப்போதைய சூழலில் உயர்கல்வி செல்ல முடியவில்லை. திருமணம் நடந்தவுடன், சென்னை, கோயம்புத்தூர் என மாறி மாறி இருந்த நிலையில் படிப்பதற்கான நேரம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் முன்பு தனது கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக இருந்த தான் உயர் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இதனை அடுத்துக் கடந்த ஆண்டு 11ஆம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 தனி தேர்வு எழுதி 346 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி பயின்றது மிகவும் மகிழ்ச்சி. தனக்குச் சட்டம் படிக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவு. ஆனால் என்னுடைய மதிப்பெண்ணுக்குச் சட்டக் கல்லூரியில் இடம் கிடைக்காது.
இதனால் யோகா அல்லது கணினி படிக்க வேண்டும் அரசு சலுகை கொடுத்தால் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவும் தயாராக இருக்கிறேன். எனக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். அவர்கள் இருவரும் நல்ல நிலையில் உள்ளனர்.
எனக்குச் சிறு வயது முதலே படிப்பில் ஆர்வம் இருந்ததால் தற்போது பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். எதற்காகவும் யாரும் பயம் கொள்ளக்கூடாது என்றார்.