கோயம்புத்தூர்செய்திகள்

சூறைக்காற்றில் சாய்ந்த 16 உயர் மின் கம்பங்கள் சீரமைப்பு!

கோயம்புத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சேதமான 16 உயர் மின் அழுத்த கம்பங்களை, நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் இணைந்து 24 மணி நேரத்திற்குள் சீர் செய்து மின் இணைப்பை வழங்கினர்.

கோயம்புத்தூர் மாநகரில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் காந்திபுரம் வி கே கே மேனன் சாலையிலிருந்த புங்கைமரம் வேரோடு சாய்ந்து அவ்வழியாகச் சென்ற உயர் மின் அழுத்தக் கம்பி மீது விழுந்தது.

இதில் வரிசையாக இருந்த 16 உயர் மின்னழுத்த கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்தது. இதனால் சித்தாபுதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் முதல் கட்டமாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தற்காலிக மின் இணைப்பை வழங்கினர்.

தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் இரவு முழுவதும் சேதமான கம்பங்களை அகற்றி, புதிய கம்பங்களை கொண்டு சீரமைப்பு பணிகளைத் துவங்கினர்.

இதில் புதிதாக 16 கம்பங்கள், மின் கம்பிகள் பொருத்தப்பட்டது. அடுத்தடுத்து 16 உயர்மின் கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், 24 மணி நேரத்தில் மின்வாரிய ஊழியர்கள் அனைத்தையும் சீர் செய்து மின் இணைப்பை வழங்கியதற்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!