கனிம வளம் கடத்தல்: 3 மாதத்தில் 29 வழக்குப் பதிவு
கோயம்புத்தூரில் கடந்த 3 மாதங்களில் கனிம கடத்தலில் ஈடுபட்டதாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குக் கனிம வளம் கடத்தப்படுகிறதா என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 9 சிறப்புக் குழுக்கள் மூலம் சுழற்சி முறையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் திடீர் தணிக்கை நடத்தியதில் கனிம கடத்தலில் ஈடுபட்டதாக 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில், பேரூர் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் சிறப்புக் குழு அதிகாரிகள் ட்ரோன் மூலம் அளவீடு செய்யப்பட்டு அறிக்கை வரப்பெற்றதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் மூலம் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் சட்ட விரோத கனிம அள்ளுதல், கடத்தல், சேகரித்தல் தொடர்பான புகாா்களைப் பெற்றுச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் பகிரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல வட்டாட்சியர் தலைமையில் மாதம் 2 முறை கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட அளவிலான குழுவுக்கு அந்த கூட்ட நடவடிக்கை குறிப்பு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.