சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள் – மின் விநியோகம் பாதிப்பு
கோயம்புத்தூரில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் மரம் மற்றும் அடுத்தடுத்து 7 மின் கம்பங்கள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இந்நிலையில் மதியத்திலிருந்து மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாகக் காணப்பட்ட நிலையில், சுமார் 4 மணியளவில் காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், சிவானந்தா காலனி, உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
சுமார் பத்து நிமிடங்கள் மட்டுமே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையில் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையிலிருந்த பெரிய புங்கை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அவ்வழியாகச் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி மீது விழுந்தது.
இதில் அந்த சாலையிலிருந்த அடுத்தடுத்த 7 மின் கம்பங்கள் சாய்ந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் காட்டூர் காவல் நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அவ்வழியாகச் செல்லும் அனைத்து மின் இணைப்புகளையும் துண்டித்தனர். பின்னர் மின் கம்பிகள் அருந்து விழாமல் இருக்கக் கயிறு மூலம் கட்டினர்.
பின்னர் அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் வேரோடு சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காந்திபுரத்திலிருந்து சித்தாபுதூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
முதல் கட்டமாக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாய்ந்த மின் கம்பங்களிலிருந்து மின் கம்பிகளை ஊழியர்கள் தனியாகக் கழட்டினர்.
மேலும் மின் இணைப்புகளைச் சீர் செய்யும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சூறைக்காற்றால் மரம் விழுந்து மின் கம்பங்கள் சாய்ந்ததால் சித்தாபுதூர், ராமகிருஷ்ணா சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரமின்றி பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
அதிகளவு வாகனங்கள், பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய சாலையில் 7 மின் கம்பங்கள் சாய்ந்ததில் யாருக்கும் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.