இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் திருநங்கை..!
கோயம்புத்தூரில் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் 22 வயது திருநங்கை – கல்வி மட்டுமே எங்களது எதிர்காலத்தைக் காப்பாற்றும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆண், பெண் போலத் திருநங்கைகளும் வரவேண்டும்.
கோயம்புத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் இந்திரஜா (22). திருநங்கை. இவர் கோயம்புத்த்தூர் ராம் நகர்ப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல் படித்து வந்தார். ஆனால் எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காகக் கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, நீட் தேர்வுக்குத் தயாராகி வருகிறது.
கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் தேர்ச்சியடையாத இந்திரஜா மீண்டும் இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளார். மேலும் இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து நீட் எழுதும் ஒரே திருநங்கை எனக் கூறிய அவர் கல்வி மட்டுமே எங்களது காப்பாற்றும் எனத் தெரிவித்தார்.
இது குறித்துப் பேசிய இந்திரஜா: யாருடைய துணையும் இன்றி தனியாகத் தங்கி நீட் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. மேலும் நான் மருத்துவர் ஆனால் எங்களது சமூகத்தினருக்கு உதவுவேன்.
மேலும் திருநங்கைகள் அனைத்து துறைகளில் வர வேண்டும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வரப் படிக்க வேண்டும் என நான் சக திருநங்கைகளுக்குக் கூறி வருகிறேன், கல்வி மட்டுமே எங்களது எதிர்காலத்தை மாற்றும் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.