கோயம்புத்தூர்செய்திகள்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு: மூதாட்டி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இருவர் கைது!

கோயம்புத்தூர் பேரூர் ஆறுமுக கவுண்டனூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராற்றில், மூதாட்டி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய பெண் உட்பட இருவரை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

கோயம்புத்தூர் பேரூர் ஆறுமுக கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி ராமாத்தாள் (57). இவரது மகன் ரத்தினசாமி (31). இருவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் ரத்தினசாமி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே நாகராஜ் மனைவி பூங்கொடி (30) என்பவர் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பூங்கொடியின் கணவர் நாகராஜ் காலமான நிலையில், அவருடன் கோயம்புத்தூர் கே.ஜி சாவடி பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி (36) என்பவர் வசித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் ராமாத்தாள் வீட்டு அருகே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, பூங்கொடிக்கும் ராமாத்தாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமாத்தாள், பூங்கொடியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரத்திலிருந்த பூங்கொடி தனது ஆண் நண்பரான ஆறுச்சாமியிடம் கூறியுள்ளார்.

பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் மது போதையிலிருந்த ஆறுச்சாமி தான் மறைத்து வைத்திருந்த அவுட்டுக்காய் என்னும் 2 நாட்டு வெடிகுண்டை ராமாத்தாள் வீட்டில் வீசி உள்ளார். இதில் வீட்டின் முன் பகுதி சேதமடைந்த நிலையில், ராமாத்தாளுக்கும், அவரது மகன் ரத்தினசாமிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்து வந்த பேரூர் காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், ஆறுச்சாமி மற்றும் பூங்கொடி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!