கோயம்புத்தூர்செய்திகள்

மேயர் பங்களாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பங்களாவில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிய, மாநகராட்சி தற்காலிக ஊழியரை காவல்துறை கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு அழைத்த நபர் ஒருவர், கோயம்புத்தூர் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வசித்து வரும் பங்களாவில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சரியாக 10 மணியளவில் வெடித்து விடும் எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக ஆர் எஸ் புரம் காவல்துறைக்குக் கட்டுப்பாட்டு அறையிலிருந்த காவல்துறை தகவல் அளித்துள்ளனர். பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு காவல்துறை மோப்பநாய் உதவியுடன் மாநகராட்சி மேயர் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதனிடையே செல்போனில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபர் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செல்போன் எண்ணை வைத்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (40) என்ற நபரை மடக்கிப் பிடித்து காவல்துறை கைது செய்தனர்.

விசாரணையில் ஆனந்த் கோவை மாநகராட்சியில் தற்காலிக பிளம்பராக வேலை செய்து வந்ததும், குடும்ப பிரச்சனை தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக மேயர் பங்களாவில் வெடிகுண்டு வைத்ததாகக் கூறியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆனந்தை கைது செய்த காவல்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!