இரு பெரிய கட்சிக்கு மத்தியில் 3-வது கட்சியில் முதன்மைக் கட்சி என்பது வருகின்ற தேர்தலில் தெரியவரும் – ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், பூத் கமிட்டி மாநாட்டிற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, ஏராளமான ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே, கோவையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வெற்றி கழகத்தின் உண்மையான கட்டமைப்பு என்ன என்பது இன்று முழுமையாக தெரியவரும். மூன்று மணி நேரம் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கத்தில் தேர்தலை எப்படி சந்திப்பது, போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
மக்கள் பிரச்னை குறித்தும், இப்போது இருக்கக்கூடிய ஆட்சியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் மக்களோடு எப்படி சேர்வது என்பது குறித்தும் அண்ணன் சொன்னது போல ’மக்களோடு சேர் மக்களோடு வாழ்’ என்ற அடிப்படையில் மக்களிடம் செல்வதற்கான அரசியல் பயிற்சி அரங்கம் இன்று நடைபெறுகிறது.
அதிமுக, திமுக என்ற இரண்டு பெரிய கட்சிக்கு மத்தியில் மூன்றாவது கட்சியில் முதன்மைக் கட்சி என்பது வருகின்ற தேர்தலில் தெரியவரும்.
அதற்கான முதல் நாளாக இன்றைய நாளை கருதுகிறேன். க்யூ ஆர் கோட் உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறோம்.
முறையான கருத்தரங்க அட்டவணைகளை வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொடுத்திருக்கிறோம். கருத்தரங்கம் முடிந்தபின் முறையாக அனைத்து தகவல்களையும் ஊடகத்திற்கு தருகிறோம்
தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும், 3 இலட்சம் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம், இவ்வாறு ஆதவ் அர்ஜூனா கூறினார்