தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா – தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செய்தனர்.
கோயம்புத்தூர் அவினாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நாள்தோறும் ஒவ்வொரு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று முக்கிய நிகழ்வான தீச்சட்டி ஊர்வலம், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலம் சென்று நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். கோவை கோனியம்மன் கோவிலில் துவங்கிய இந்த ஊர்வலமானது ஒப்பணக்கார வீதி, வழியாக அவினாசி சாலையை வந்தடைந்து தண்டு மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.

நேர்த்திக்கடன் செலுத்தி வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் குடிநீர், நீர் மோர், குளிர்பானங்கள், கூழ் ஆகியவற்றை வழங்கினர். மேலும் பலர் நேர்த்திக்கடன் செலுத்துவோரின் பாதங்களுக்குத் தண்ணீர் ஊற்றி ஆசி பெறுகின்றனர்.
இந்நிகழ்வையொட்டி கோவை மாநகர காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். போக்குவரத்து காவல்துறையினரும் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்தைச் சீர் செய்தனர்