தொடர் 4 மணி நேரம் பானைகள் மீது நின்றபடி சிலம்பம் சுற்றி உலக சாதனை!
கோவையில் மூன்று வயது சிறுவர்கள் துவங்கி 13 பேர் இரண்டு பானைகள் மீது நின்றபடி சிலம்பம், மான்கொம்பு, சுருள் வாள் உள்ளிட்ட தமிழர் விளையாட்டுகளைத் தொடர்ந்து நான்கு மணி நேரம் சுழற்றி சாதனை படைத்துள்ளனர்.
கோவையில் தமிழர் கலைகளை மீட்கும் விதமாக அடுக்காக வைக்கப்பட்ட இரண்டு பானைகள் மீது நின்றபடி நீண்ட நேரம் சிலம்பம் கலையைச் செய்யும் உலக சாதனை முயற்சி சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆதி தமிழன் கலை கூடத்தில் சிலம்ப கலை பயின்று வரும் மூன்று வயது சிறுவர்கள் துவங்கி 13 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வரிசையாக வைக்கப்பட்ட பானைகள் மீது நின்ற சிறுவர், சிறுமிகள் சிலம்பம், சுருள் வாள், மான் கொம்பு மற்றும் வாள் வீச்சை தொடர்ந்து 4 மணி நேரம் செய்தனர்.
வயது அடிப்படையில் நடைபெற்ற இந்தச் சாதனை நிகழ்வைக் கண்காணித்து குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு உலக சாதனை பதிவாக அங்கீகரித்து, சாதனை மாணவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
இதே போல அண்மையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு,18 தங்கம்,5 வெள்ளி,3 வெண்கலம் என 26 பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.