கோயம்புத்தூர்க்ரைம்

இருசக்கர வாகனத்தில் மறைத்து ரூ.56.50 லட்சம் ஹவாலா கடத்தியவர் கைது.

கோவையிலிருந்து கேரளாவிற்கு இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் அறை அமைத்து ரூ.56.50 லட்சம் ஹவாலா கடத்தியவரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்தனர்.

கோவையிலிருந்து கேரளாவிற்கு அடிக்கடி ஹவாலா பணம் கடத்தப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் எட்டிமடை பகுதியில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வேலந்தாவளம் மற்றும் வாளையாறு பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கோவையிலிருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாகக் கே.ஜி சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாளையாறு மற்றும் வேலந்தாவளம் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவையிலிருந்து வேலந்தாவளம் சோதனைச் சாவடி நோக்கி வந்த கேரள பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனம் ஒன்று, போலீசார் நிற்பதை கண்டு, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வாகனத்தை வந்தவர் திருப்பிச் சென்றார்.

இதைக் கண்ட போலீசார் பின்னால் விரட்டிச் சென்று இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தி வாகனத்தை ஓட்டி வந்த நபரை விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தைச் சோதனையிட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் பகுதியில் தனியாக அரை அமைத்து அதில் கட்டு கட்டாக ஹவாலா பணத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் அமைக்கப்பட்ட அறையில் இருந்த ரூ.56.50 இலட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது அவர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஹம்சா மகன் சபீக் (38), என்பதும், இவர் தங்க நகை வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. கோவைக்கு வந்து தங்க நகைகளை விற்பனை செய்துவிட்டு, அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு உரிய ஆவணங்களின்றி அதனை எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட ரூ 56.50 லட்சம் ஹவாலா பணம் மற்றும் கைது செய்யப்பட்ட சபீக்கை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!