கோவையில் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவாரூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையினரை கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க கோரி கடந்த அக்.31 ஆம் தேதி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போலீஸாரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சமாதானம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்துச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த நவ.17 ஆம் தேதி நள்ளிரவில் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் ஹனிபா உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்களைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலம் அருகே சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேண்டுமென்றே கைது நடவடிக்கையை மேற்கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாரை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.