வரும் 29ஆம் தேதி 7 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் வரும் நவ. 29ஆம் தேதி 7 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் சனிக்கிழமை (நவ.22) நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஞாயிற்றுக்கிழமை (நவ.23) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நிலவுகிறது.
இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஞாயிற்றுக்கிழமை (நவ.23) உருவானது. இதன் காரணமாகக் குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) செவ்வாய்க்கிழமை (நவ. 25) உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் சின்னம் தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற புதன்கிழமை (நவ.26) ‘சென்யாா்’ புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வரும் நவ. 29 ஆம் தேதி(சனிக்கிழமை) மிகக் கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதேபோல, நவ. 29 -ல் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.