மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் சிறையில் அடைப்பு
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட மேலும் ஒருவர் சிகிச்சைப் பின் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நவ.2 ஆம் தேதி, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த 23 வயது கல்லூரி மாணவியை, மது போதையில் வந்த மூன்று பேர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் ஆண் நண்பரையும் அரிவாளால் வெட்டினர். இதில் பாதிக்கப்பட்ட மாணவி, மற்றும் நண்பர் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைத்து மூவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வெள்ளக்கிணறு அருகே பதுங்கியிருந்த சிவகங்கையை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்புசாமி (30), காளீஸ்வரன் (21) மற்றும் மதுரையை சேர்ந்த குணா என்கிற தவசி (20), ஆகிய மூவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
இதில் இரண்டு கால்களில் குண்டு பாய்ந்த சதீஷ், தவசி மற்றும் ஒரு காலின் குண்டு பாய்ந்த காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் போலிசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட தவசி சிகிச்சைக்கு பின், நேற்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் காளீஸ்வரன் சிகிச்சைக்கு பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சிகிச்சையில் இருந்து ஆண் நண்பரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதனிடையே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.