தப்பிய “ரோலக்ஸ் யானை” – மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தோல்வி
கோவை தொண்டாமுத்தூரில் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தோல்வி. – வனப்பகுதியில் மாயமான “ரோலக்ஸ் யானையை” தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய விளை பொருட்களைச் சேதப்படுத்தி வரும் “ரோலக்ஸ் காட்டு யானை” மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, 50 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு யானையைப் பிடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கெம்பனூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இரண்டு மயக்க ஊசி செலுத்த முயன்றனர்.
அதிலிருந்து தப்பித்த “ரோலக்ஸ் காட்டு யானை” வனப் பகுதிக்குள் ஓடியது. இதையடுத்து வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானையைத் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மயக்க ஊசி செலுத்த முயன்றபோது யானையை வனத்துறையினர் வனத்துறை வாகனத்தில் துரத்திச் சென்றபோது, திடிரென ரோலக்ஸ் யானை நின்று வாகனத்தைத் தாக்க முற்பட்டது.
இதையடுத்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றபோது வழியில் வந்த நாயை எட்டி உதைத்துச் சென்றது. இந்த விடியோ காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.