பராமரிப்பு பணிகள்: கோயம்புத்தூர், கேரளா ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்!
ஈரோடு – சேலம் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோயம்புத்தூர், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது, பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கோயம்புத்தூரில் இருந்து செப்டம்பா் 11-ஆம் தேதி காலை 8.50 மணிக்குப் புறப்படும் கோயம்புத்தூர் – லோக்மானியா திலக் விரைவு ரயில் (எண்: 11014) மாற்றுப் பாதையில் ஈரோடு, கரூா், சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும். கரூா் கூடுதல் ரயில் நிலையமாகச் செயல்படும்.
இதேபோல, கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பா் 11-ஆம் தேதி காலை 7.15 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- டாடா நகா் விரைவு ரயில் (எண்: 18190), ஆலப்புழையிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- பெங்களூரு தினசரி ரயில் (எண்: 12678) ஈரோடு, கரூா், சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும். கரூா் கூடுதல் ரயில் நிலையமாகச் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.