3-வது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 -வது முறையாக மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காலை 7.40 மணியளவில் மர்ம நபர்மூலம் மின்னஞ்சல் வந்துள்ளது.
அதில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு கருப்பு பெட்டியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2.45க்குள் அனைவரையும் வெளியேற்றிக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஆட்சியர் அலுவலகம் முழுமையாகச் சோதனையிட்டனர்.
இதில் வெடிகுண்டுப் பொருட்கள் ஏதும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளியெனத் தெரியவந்தது. ஏற்கனவே இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.