கோவை வனப்பகுதியில் காட்டு யானைத் தாக்கி முதியவர் பலி!
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாச்சலம் (65), இவர் சனிக்கிழமை தங்கள் கிராமத்திலிருந்து முருகன் (55), சகாயம் (25), சதீஷ் (30), ஆகியோருடன் அருகே வனப்பகுதியில் உள்ள பெருமாள் முடி கோயிலுக்குச் சென்றனர்.
பின்னர் மீண்டும் மாலை கோயிலிலிருந்து இறங்கும்போது, வேட்டைக்காரன் கோயில் அருகே திடீரெனக் காட்டு யானை வெளியே வந்துள்ளது. இதைக் கண்ட மருதாச்சலம் உள்ளிட்ட நான்கு பேரும் சிதறி ஓடினர்.
சனிக்கிழமை இரவு முருகன், சகாயம், சதீஷ் ஆகிய மூன்று பேர் கிராமத்திற்கு வந்த நிலையில், மருதாச்சலம் மட்டும் மாயமானார். இரவு முழுவதும் வராததால் கிராம மக்கள் உடனடியாகத் தொண்டாமுத்தூர் போலீஸ் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் போலீசாருடன் வந்த வனத்துறையினர் கிராம மக்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேட்டைக்காரன் கோயில் அருகே மருதாச்சலம் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். ஆய்வில் காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருதாச்சலத்தின் உடலை மீட்டத் தொண்டாமுத்தூர் போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் காட்டு யானை தாக்கியது தொடர்பாக வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.