கோவை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலை மூடக்கூடாது என உத்தரவு!
கோவை அரசு மருத்துவமனையின் இரண்டாவது நுழைவு வாயிலை மாலை 6 மணிக்கு மூடக் கூடாது எனக் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி உத்தரவிட்டுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனைக்குக் கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் தினமும் 4,500 வெளிநோயாளிகள், 1,500 உள்நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்குள் செல்ல திருச்சி சாலையில் மூன்று நுழைவு வாயில் உள்ளது.
இதில், இரண்டு நுழைவு வாயில் புதிய கட்டிடம் பகுதியிலும், ஒரு நுழைவு வாயில் முதல்வர் அலுவலகத்திற்கு செல்லும் பகுதியிலும் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக முதல்வர் அலுவலகம் செல்லும் பிரதான நுழைவு வாயில் மாலை 6 மணிக்கு மூடப்பட்டு வருகிறது.
இந்த நுழைவு வாயில் மாலை 6 மணிக்கு மூடப்படுவதால், முடநீக்கியல் துறை, நரம்பியல் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, ஐசியு, கட்டண பிரிவு போன்ற துறைகளில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள், தங்களுக்கு உணவு வாங்கவும், வேறு பணிகளுக்காக வெளியில் செல்லவும், உள்ளே வரவும் அரை கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயிலை பயன்படுத்த வேண்டிய நிலையுள்ளது.
மாலை 6 மணிக்கே நுழைவு வாயில் மூடுவதால் மிகவும் சிரமமாக இருப்பதாக நோயாளிகள் தெரிவித்து வந்த நிலையில், அரசு மருத்துவமனையின் முதல்வர் கீதாஞ்சலி நுழைவு வாயிலை மாலை 6 மணிக்கு மூடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வசதிக்காக இரவு 8.30 மணி வரை நுழைவு வாயில் திறந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.