ஆட்டை கடித்து இழுத்துச் செல்லும் நாய்கள் – அதிர்ச்சி சிசிவிடி காட்சி
கோவை கருப்புக்கடை சலாமத் நகர் பகுதியில் 6 நாய்கள் சேர்ந்து ஆட்டை கடித்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கரும்புக்கடை, புல்லுக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு சுற்றித் திரியும், வீடற்ற நாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் கரும்புக்கடை சலாமத் நகர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டை அங்கிருந்த 6 நாய்கள் கொடூரமாக கடித்து இழுத்துச் சென்றது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் நாய்களை விரட்டினார். அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் வரும் செவ்வாய்க்கிழமை புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய் கருத்தடை மையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 82, 84, 86 ஆகிய வார்டுகளில் ஆதரவற்ற தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.
இதனால் அடிக்கடி பள்ளி குழந்தைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே கோவை மாநகராட்சிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
இன்று சலாமத் நகர் பகுதியில் 6 தெரு நாய்கள் ஆடு ஒன்றை கடித்து இழுத்தது, அதேபோல் அருகே உள்ள பள்ளிவாசல் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டையும் நாய்கள் கடித்துள்ளது. குறிப்பாக புல்லுக்காடு பகுதியில் நாய் கருத்தடை மையம் கொண்டு வந்ததிலிருந்து இந்த பிரச்சனை இருந்து வருகிறது.
இங்கு கருத்தடை செய்யப்படும் நாய்களை இதே பகுதியில் விடுவதால் சாலையில் சுற்றித் திரிகிறது. இதனால் மதரசா மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்போரை பின்னால் துரத்தி செல்வதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே விரைவில் நாய் கருத்தடை மையத்தை அகற்ற வேண்டும் என தெரிவிக்கின்றனர்.