குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைவதை தடுக்க கோரி அதிமுக சார்பில் மனு..!
கோவையில் குப்பை தரம்பிரிக்கும் மையம் அமைவதை தடுக்க வலியுறுத்திக் கோவை மாவட்ட ஆட்சியர், மற்றும் கோவை மாநகர ஆணையாளரை சந்தித்து மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுனன் மனு அளித்தார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் கோவை மாநகராட்சி சார்பாகக் குப்பைகள் கொட்டி தரம்பிரிக்கும் மையம் அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
ஆனால் இந்தப்பகுதியை சுற்றிலும் அரசு, மற்றும் தனியார் பள்ளிகளும், 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவரும் குடியிருப்பு பகுதியாகவும் இருப்பதால், இந்தப் பகுதியில் குப்பைகள் தரம்பிரிக்கும் மையத்தை ஏற்படுத்தினால், பொதுமக்கள் நோய்தொற்றுகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாககூடும், மேலும் சுற்றுவட்டார பகுயிகளை சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதிலும் சிரமங்கள் ஏற்படும் என்பதால், இன்று அப்பகுதி மக்கள், அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரையும், கோவை மாநகராட்சி ஆணையாளரையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
ஏற்கனவே கோவை மாநகராட்சி நிர்வாகம் கோவை பீளமேடு, காளப்பட்டி, பகுதியில் இயங்கிவந்த மயானத்தை கோவை மாநகராட்சி ஆக்கிரமித்து, குப்பைகள் தரம்பிரிக்கும் மையம் அமைத்ததால், சுற்றுவட்டார பகுதி மக்கள், மயானத்தை பயன்படுத்த முடியாமலும், துர்நாற்றத்தால் குடியிருக்க முடியவில்லை என்று பல்வேறுகட்ட போராட்டங்களை இப்பகுதி மக்கள் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.