விளையாட்டு

நான்காவது டெஸ்ட் போட்டி – இந்திய அணி பேட்டிங்..!

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 எனப் பின்தங்கி உள்ளது.

இந்நிலையில் 4 -வது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (23-ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஒரு வேலை, தோல்வியடைந்தால் இந்த டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களின் காயங்கள் இந்திய அணியின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகி உள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப், இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர், மான்செஸ்டர் போட்டியில் களமிறங்கவில்லை.

இந்தத் தொடரில் இதுவரை களமிறக்கப்படாத இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் இடது கைவிரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடையவில்லை. எனவே மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அன்ஷுல் கம்போஜ் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

பணிச்சுமை காரணமாக இந்தத் தொடரில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாட முடிவு செய்திருந்த பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, மான்செஸ்டர் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

சுழற்பந்து வீச்சில் இந்தத் தொடரில் இதுவரை ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் பேட்டிங்கை பலப்படுத்துவதற்காகவே இவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நடப்பு தொடரில் 4 அரை சதங்களுடன் 327 ரன்கள் எடுத்துள்ளார் ஜடேஜா. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது.

மான்செஸ்டர் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் விளையாடும் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளரான ஷோயப் பஷிருக்கு பதிலாக இடது கைச்சுழற்பந்து வீச்சாளரான லியாம் டாவ்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர், 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் அணிக்குத் திரும்பி உள்ளார்.

ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி கண்டது இல்லை.

5 ஆட்டங்களை டிரா செய்துள்ள இந்திய அணி, 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்திருந்தது. இந்த மைதானத்தில் 1990-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர் சதம் விளாசியிருந்தார்.

அதன் பின்னர் 2014-ம் ஆண்டு ஓல்டு டிராஃபோர்டில் விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாகத் தோனி 71 ரன்கள் சேர்த்திருந்தார்.

அவருக்கு அடுத்தபடியாக அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் முறையே 40 மற்றும் 46 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

மான்செஸ்டரில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் லேசான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஈரப்பதமான வானிலையைக் கருத்தில் கொண்டு ஆடுகளம் முதல் நாளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!