தேசிய புலனாய்வு முகமை வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்களை விரைவில் அமைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
என்.ஐ.ஏ, எனப்படும் தேசிய முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கைலாஷ் ராமசந்தானி என்பவர், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மல்யா பாக்சி அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சிறப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுவோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் தேவை.
இத்தகைய வழக்குகளைத் தினசரி விசாரிக்க வேண்டியது அவசியம். சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக மே 23ல் பிறப்பித்த உத்தரவுக்கு இதுவரை பதில் இல்லை.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விசாரணையை முடிப்பதற்கான வலுவான கட்டமைப்பு இல்லாத நிலையில், சந்தேக வழக்கில் கைதானவர்களை எத்தனை காலம்வரை காவலில் வைத்திருக்க முடியும்.
எனவே மத்திய – மாநில அரசுகள் இதற்காகத் தனி நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அடுத்த விசாரணையின்போது மனுதாரரை ஜாமினில் விடுவிக்க நேரிடும். இதுதான், மத்திய அரசுக்கு நாங்கள் தரும் கடைசி வாய்ப்பு என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.