கோவையில் யானை தாக்கிப் பெண் பலி!
கோவை நரசீபுரம் அருகே காட்டு யானை தாக்கி, நீரோடையில் துணி துவைத்து கொண்டிருந்த பெண் உயிரிழந்தார்.
கோவை நரசீபுரம் அடுத்த சவுக்குகாடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா இவரது மனைவி செல்வி (23). தோட்டவேலை செய்து வந்தார். இந்த நிலையில் செல்வி துணி துவைப்பதற்காக நரசீபுரத்திலிருந்து வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் உள்ள நீர் ஓடையில் துணி துவைத்து கொண்டிருந்தார்.
அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை திடீரெனச் செல்வியை தாக்கியது. இதில் கீழே விழுந்த செல்வி பலத்த காயமடைந்தார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் யானையை விரட்ட முயன்றனர்.
பின்னர் போளூவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் யானையை அடர் வனப் பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து உயிருக்குப் போராடிய செல்வியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆலந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.