கோவை குண்டு வெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளுக்குப் பின் கைதான குற்றவாளி!
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜா என்பவரை, வரும் ஜூலை 24 ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். சுமார் 150 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடப்படும் குற்றவாளிகள் என அறிவித்துப் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில், பைப் வெடி குண்டு வாங்கி கொடுத்தவரும், 18 ஆவது குற்றவாளியான கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த டெய்லர் ராஜா என்பவரைக் கர்நாடகா மாநிலத்தில் வைத்துக் கோவையில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே 3 கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டதும், குண்டு வெடிப்பு சம்பவதிற்கு பின் தலைமறைவான, ராஜா தனது பெயர் அடையாளங்களை மாற்றிக் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவைக் கோவை அழைத்து வந்த போலீசார் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இதையடுத்து டெய்லர் ராஜாவைப் போலீசார் கோவை 5 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதியரசர் வெர்ஜின் வெஸ்டா டெய்லர் ராஜாவை வரும் ஜூலை 24 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜா கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.