கோயம்புத்தூர்தமிழ்நாடு

தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு!

கோயம்புத்தூர்: தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோயம்புத்தூர் மூன்றாவது சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோயம்புத்தூர், ரத்தனபுரி பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம். இவா் காந்திபுரம் நூறு அடி சாலையில் ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை வாங்கி அதில் உணவகத்தை நடத்தி வந்தாா். இவரது மகன்கள் முத்துகுமாா் (50), கணேசன் (47).

உணவகத்தைக் கணேசனுக்கும், சிவானந்தா காலனி பகுதியில் உள்ள மற்றொரு கடையை முத்துகுமாருக்கும் சிதம்பரம் பிரித்துக் கொடுத்தாா். இருவரும் தனித்தனியாகக் கடைகளை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கணேசன் நடத்தி வந்த உணவகத்தின் நில உரிமையாளா் உணவகத்தைத் திரும்பக் கேட்டாா். இதையடுத்து, கடைக்குச் செய்த செலவுத் தொகை, முன்பணம் ஆகியவற்றை கணேசனிடம் இடத்தின் உரிமையாளா் கொடுத்தாா்.

இதில் தனக்கும் பங்குத் தொகை வேண்டும் என முத்துகுமாா் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.. இதனால், அவருக்கு ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால், முத்துகுமாா் தனக்கு மேலும் ரூ. 3 லட்சம் வேண்டும் எனகேட்டுத் தகராறு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து இருவருக்கும் இடையே கடந்த 9.11.2017-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முத்துகுமாா், கணேசனை அரிவாளால் வெட்டினாா். படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இது தொடா்பான வழக்குக் கோயம்புத்தூர் மூன்றாவது சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முத்துகுமாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி.கே.தமயந்தி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!