கோவை தொண்டாமுத்தூர் அருகே உலா வந்த சிறுத்தை!
கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் வன எல்லையில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை மருதமலை, தொண்டாமுத்தூர், மதுக்கரை, தடாகம், உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது.
இதில் சமீப காலமாக மதுக்கரை வனச்சரகம் மற்றும் கோவை வனச்சரக வன எல்லைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு வன எல்லைகளுக்கும் வரும் சிறுத்தைகள் ஆடு, நாய், மாடுகளை வேட்டையாடுகிறது.
இந்நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று குப்பேபாளையம் வன எல்லையில் உலா வந்தது.
ஆனால் அப்பகுதியில் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டு இருந்ததால், சிறுத்தை ஊருக்குள் வர முடியாமல் அங்கு இங்கும் உலா வந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு அந்தச் சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை வன எல்லையில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டின் அருகே உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.