கோவையில் தண்ணீர் லாரி கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் தண்ணீர் நிரப்ப வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் அந்நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
கோவை அவினாசி சாலை ஹோப்ஸ் பகுதியில் தனியார் கார் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (33), என்பவர் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் திங்கள்கிழமை விற்பனை நிலையத்திற்குத் தண்ணீர் நிரப்ப தண்ணீர் லாரி ஒன்று வந்தது. அப்போது பணியில் இருந்த பிரசாந்த் லாரி பின்னால் இயக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென லாரியின் சக்கரம் அங்கிருந்த சிலாப் மேலே ஏறியது. இதில் சிலாப் உடைந்து முழு தண்ணீர் லோடுடன் இருந்த லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் அருகே நின்று கொண்டிருந்த பிரசாந்த் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் பிரசாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.